ஓகை - பெயர்க்காரணம்
ஓகை - பெயர்க் காரணம்.
ஓகை என்பது காவிரியின் கடை முக்கோணத்தில் (டெல்ட்டா) இருக்கும் ஒரு சிற்றூரின் பெயர். இப்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் இருக்கிறதென நினைக்கிறேன். இந்த சிற்றூரில்தான் மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் என் மூதாதையர்கள் வாழ்ந்தார்கள். என் தாத்தா, அப்பா மற்றும் சில நேரங்களில் என்னையும்கூட இந்த ஊரின் பெயரை எங்கள் பெயருடன் சேர்த்து என் உறவினர்கள் அழைப்பார்கள் . என் வாழ்நாளில் நான் சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே இந்த ஊரில் கழித்திருக்கிறேன். ஆனாலும் அந்த ஊரும் அந்தப் பெயரும் எனக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. ஓகை என்ற சொல்லைக் கம்பரும் மற்றவர்களும் உவகை என்ற பொருளில் பயன் படுத்தியிருக்கின்றனர்.
என் பத்து வயது வரை என் வாழ்க்கை குடந்தையில்தான் நடந்தது. அதனால் என் நினைவுகளில் நிரந்தரமாய்த் தங்கிவிட்டது தஞ்சைத் தரணி. இப்பகுதியின் ஏதோ ஒரு சிற்றூரின் விவரிப்பு ஓகைக்கும் பொருந்தும். இப்பகுதியின் எந்த ஒரு சிற்றூரையும் இப்படி விவரிக்கலாம்.
வயலும், வைக்கோல்போரும், வாய்க்காலும், வரப்புகளும், வண்டல் மண்ணும், வற்றாத கிணறுகளும், வாழ்வதற்கான அத்தனை வனப்புகளைக் கொண்டதும், மருத நிலத்தின் பண்புகள் மிகுந்து மிளிருவதுமான ஒரு நிலத்துண்டு.
எனக்கு ஓகை என்று சொல்லும்போது தஞ்சைத் தரணியுடன் ஏற்படும் தொடர்பில் ஒரு கற்பனை சுகம் வந்துவிடும். இந்த சுகம் என் எல்லா புலன்களையும் வருடிவிட்டுச் செல்லும்.
வெறுங்காலில் நடக்கும்போது மெத்திடும் மென்மணலின் சுகம், எப்போதோ தட்டுப்படும் நெரிஞ்சிலைத் தூர எறிந்த பின்னும் தொடரும். சுற்றிவரும் காற்றில் ஈரம் உயிர்ப்பாயிருக்கும். அங்கு நான் உண்ட கன்னலும் களியும் இன்னமும் நாவில் ருசிக்கும். ஆறும் சோலையும், மாவும் தெங்கும், ஆலும் அரசும், வாழையும் தாழையும், நாணலும் மூங்கிலும், கோவிலும் குளமும், மடுவும் குட்டையும், தேரும் திருவிழாவும், மீனும், மாடும், ஆடும், ஆனையும், இன்ன பிறவும் கண்களை விட்டகலாமல் இன்றளவும் நிற்கும்.
என் மூக்கு இன்னமும் இழக்காத ஒரு கலவை சுகந்தம் சுவாசத்தில் என்றும் கலக்கும். சாணமும், புழுதிக் காற்றின் மண்மணமும், பச்சை நெடியும், இவற்றை இணைக்கும் ஏதோ ஒன்றும், நீர்நிலைகளின் பாசி மணமும், நெல்வேகும் புழுங்கல் மணமும், வெற்றிலை பாக்கு வாசனையும், பூக்களுக்கு மணமிருப்பதை சிலநேரம் மறந்து போகச் சொல்லும். இந்நிலத்தில் காற்றின் ஈரமும் கடுங்கோடையும் கூட்டணியாகிச் சுரக்கச் செய்யும் வியர்வையின் மணம் கூட வேறானதோ என உணரும் ஒரு பொய்யை என் மனம் பலவேளை படைப்பிக்கும்.
வாகீச கலாநிதிகளின் வளமான தமிழும், வட்டார வழக்காய் வாஞ்சையில் மூழ்கி வடிவிழந்த சொற்களும், பல்லியத்தின் பண்பட்ட பல இசையும், பண்டிதரின் பண்ணிசையும், பாமரரின் நாட்டுப் பாடல்களும், வடமொழி விற்பனரின் வியாக்கியானமும், வேத கோஷமும், நட்பின் நையாண்டியும் நக்கலும், இவையேதும் காதில் விழாதிருக்கும் நேரத்தில் விரிவான ஆலாபனையாய் ஒரு நூறு பறவைகளின் ஓங்காரமும் கேட்கும்.
கங்கைக் கரையை கம்பர் விவரித்தது எனக்கு காவிரிநிலத்தை விவரித்தது போலவே இருக்கிறது. மருதநிலச் சிறப்பைப் பற்றி ஒரு கம்பராமாயணப் பாடல்:
தண்டலை மயில்கள் ஆடத்
....தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக்
....குவளை கண் விழித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத்
....தேன் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
....மருதம் வீற்றிருக்கும் மாதோ.
(நான் புரிந்து கொண்ட) பொருள்: சோலையில் மயில்கள் ஆட விளக்குகளாக தாமரை மலர்கள் தயார். ஆனால் மேகங்களோ முரசொலிக்கு ஏங்கிநிற்க, கண் விழித்துப் பார்க்கின்றனவே குவளை மலர்கள். தெள்ளிய நீர்நிலைகளின் சிற்றலைகள் திரைச்சீலையாய் நெளிய, தேனிசை பிழியும் மகர யாழையும் மிஞ்சும்படிக்கு வண்டினங்கள் இனிதாய்ப் பாடிகொண்டிருக்கின்றன. இந்த நாடகாமாய் வீற்றிருக்கிறாளே மருத நில மங்கை!