Friday, April 28, 2006

யாருக்கு ஓட்டு?

யாருக்கு ஓட்டு?

நிச்சயமாக திமுகவிற்கு இல்லை. தொலைக்காட்சி இலவசம். அத்துடன் கேபிள் தொடர்பும் இலவசம். திமுகவிற்கு தற்காலத்தின் எல்லா அரசியல் நடவடிக்கைகளும் குவியும் ஒரு இடம் சன் டிவி. இதை மீறி நாம் சிந்திப்பதற்கே கடினமாக இருக்கிறது. அப்படி சிந்தித்தாலும் பெரிதாக அவர்களுக்கு சார்பாக ஒன்றும் இல்லை.

அதிமுகவிற்குப் போட வேண்டுமா? கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் ஜனநாயகம் மருந்துக்குக்கூட இல்லையே! கடந்த கால நிகழ்வுகள் பயபிராந்தியை உண்டு பண்ணுகிண்றனவே! ஆனால் இயல்பாக அமைந்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு, தேசியத்தில் ஒரு நம்பிக்கை, இவையெல்லாம் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றன. ஆனால் பத்து கிலோ அரிசி இலவசம் என்றவுடன் மனது சோர்ந்து போகிறது. பார்ப்போம்.

வேறு யார் இருக்கிறார்கள்? காங்கிரஸா? அக்கட்சியின் செயல்பாடுகளால் அக்கட்சிக்கு இப்போது சொத்துக்கள் மட்டுமே இருக்கவேண்டும். ஓட்டுகள் இருக்க முடியாது. இருப்பது அதிசயம்தான். இந்தியாவின் மிகப்பெரிய ராஜதந்திரம் ஏதோ காந்தி என்ற பெயருடைய ஒருவரை இந்திரா பிரியதர்சினி திருமணம் செய்து கொண்டதுதான் என்று என் நண்பனொருவன் கூறுவான், உண்மைதான். பெருங்காய டப்பாவில் இப்போது அந்த வாசனையும் போய் துருவின் தகர வாடைதான் வீசுகிறது.

பிஜேபி? இந்துத்வா கல்லைக் கட்டிக்கொண்டு கடலில் நீந்திக் கொண்டிருக்கிறார்களே? என்னதான் சிறந்த நீச்சல் வீரரானாலும் கல்லுடன் நீந்தி யாரை வெல்லமுடியும்? இந்தியப் பொருளாதாரத்திற்கு விடிவெள்ளியாய் வந்தார்கள் என்று நினைத்தால் திருசங்குவிற்கு சொர்க்கம் கொடுத்த விஸ்வாமித்திரர் போல் ஒரு சங்கராச்சாரியாருக்காக தங்கள் சக்தி முழுவதையும் வீணடிக்கிறார்கள். இபோதைக்கு இவர்களுக்கு இல்லை.

அப்புறம் யார்? மதிமுக? நன்றாகப் பேசுகிறார்கள். திராவிடக் கொள்கைகளுக்காக மற்றவர்கள் மனதைப் புண் படுத்தியதாகத் தெரியவில்லை. இலங்கைப் பிரச்சனைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதீதமாகவும் அந்நியமாகவும் தெரிகிறது. இந்திய அரசிடமும் சர்வதேச அரங்கிலும் பேசவேண்டியதை தமிழக அரசியலுடன் சம்பத்தப்படுத்த இயலவில்லை. பார்ப்போம்.

பாமக? இவர்களை ஜாதிக்கட்சியாகப் பார்ப்பதை இன்னும் தவிர்க்க முடியவில்லையே! மரம் வெட்டிய்தையும், தனி வட தமிழ்நாடு கேட்டதையும் மறக்க முடியவில்லையே! அன்புமணியால் பலபேர் மனதிலிருந்த கமாவை முற்றுப்புள்ளியாக்கவும், பலபேர் மனதில் புது கமாவையுமே உருவாக்க முடிந்திருக்கிறது. இவர்களுக்கு இல்லை.

பொதுவுடமைக் கட்சிகள்? சித்தாந்த ரீதியாக ஒப்புக்கொள்ளமுடியாத கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் செயல்பாட்டு ரீதியாகவும் மக்களுக்கு பயனில்லாதவர்களாகிவிட்டார்கள். உலகம் முழுவதும் தோற்றுக் கொண்டிருக்கும் சித்தாந்தம்.

லோக் பரித்ரன் - முயற்சித்திருவினையாகட்டும். திரு M.S. உதயமூர்த்தி கூட ஒரு கட்சி ஆரம்பித்தார். அது போலல்லாமல் முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம். ஓட்டு? யோசிக்கவேண்டும்.

விஜயகாந்தின் செயல்பாடுகள், பேச்சுகள் மற்றும் தேர்தல் அறிக்கை, முக்கியமாக அந்த பசுமாடு - என் பார்வையில் இவையெல்லாம் நேரடியான ஏமாற்று வேலைகளாகத் தெரிகின்றன. 1967க்கு முன்பு சரியான பஞ்சத்தில் அடிபட்டு அரிசிக்குப் பதிலாக கோதுமை தின்னும் ஒரு நிலையினை அடைந்து அதன் நினைவாகவே இருந்த மக்களிடம் ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருகிறோம் என்று சொல்லி அதைக் கொடுக்காவிட்டால் முச்சந்தியில் நிற்கவைத்து சாட்டையால் அடிக்கலாம் என்றும் சொல்லி ஆட்சியைப் பிடித்த அதே ஏமாற்று வேலை இப்போது பலிக்குமா?

மைலாப்பூரை எடுத்துக் கொள்ளுங்கள். நெப்பொலியனுக்கு எதிராக வெல்லும் வாய்ப்புடைய SV சேகருடைய வாக்குகளை பிஜேபி ஆதரவு பெற்ற சந்திரலேகாவும் லோக் பரித்திரனின் வேட்பாளரும் கொஞ்சம் பிரிப்பார்கள் போல் தெரிகிறது. இதுபோல் எத்தனை தொகுதிகள்? திமுக வெல்லுமோ என்று நினைத்தாலே மனதுக்கு இதமாக இல்லை. டிவி மற்றும் தயாநிதியைத் தவிர்த்தும் திமுக வை நிராகரிக்க பல காரணங்கள் இருக்கின்றனவே!

யோசிக்க இன்னும் நிறைய நேரமிருக்கிறது.

*********

7 Comments:

At April 29, 2006 3:08 AM, Blogger பிச்சைப்பாத்திரம் said...

All the best. Keep writing.

- Suresh Kannna

 
At April 29, 2006 6:13 AM, Blogger Unknown said...

வாங்க வாங்க. யாருக்குப் போடுறதுன்னு குழப்பத்திலே யாருக்குமே போடாம இருந்திடாதிங்க....

 
At April 29, 2006 6:53 PM, Blogger மாயவரத்தான் said...

அ.தி.மு.க.வில் ஜனநாயகம் இல்லை என்று சொல்பவர்கள் தி.மு.க.வில் மட்டும் என்ன வாழுகிறதாம் என்று யோசிக்க வேண்டும்?

கருணாநிதி அவரது குடும்பத்தினர் ஆக்கரமித்துக் கொண்டு அவர்கள் ஒருவருக்கொருவர் பேசுவது தான் உட்கட்சி ஜனநாயகமா?

 
At April 29, 2006 9:38 PM, Blogger குழலி / Kuzhali said...

//ஆனால் இயல்பாக அமைந்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு, தேசியத்தில் ஒரு நம்பிக்கை, இவையெல்லாம் கொஞ்சம் யோசிக்க வைக்கின்றன.
//
என்னது பயங்கரவாத எதிர்ப்பா? வைகோ, நெடுமாறன்,நக்கீரன் கோபாலெல்லாம் பயங்கரவாதியா?

 
At May 01, 2006 12:39 AM, Blogger ஓகை said...

சுரேஷ் கண்ணன் வாழ்த்திற்கு மிகவும் நன்றி.
வாங்க KVR. யாரையும் பிடிக்கலன்னா ஒரு ஓ போடவேண்டியதுதான்.
நகுபோலியன் அய்யா பிழை திருத்தியதற்கு நன்றி.
வாங்க மாயவரத்தான். ஒரு காலத்தில் உள்கட்சி ஜனநாயத்திற்கு திமுக என்று பெயரெடுத்திருந்தது. ஆனால் இப்போது அது வாழ்ந்து கெட்ட குடும்பம்போல்.
சிட்டுக்குருவி உங்கள் கருத்துகளுக்கு மிக நன்றி. ஆனால் விஜயகாந்த் என்ன செய்கிறார் என்று பொருத்திருந்து பார்ப்போம்.

வாங்க குழலி. நான் குறிப்பிட்டிருந்தது ஒப்பீட்டளவில் திமுக ஆட்சியிலும் அதிமுக ஆட்சியிலும் எனக்கேற்பட்ட உணர்வுகள்தான். தீவிரவாதம் தமிழைப் பற்றியதாக இருந்தால் பரவாயில்லை என்பது போலெல்லாம் யாரும் அதிமுகவில் பேசுவதில்லையே.

 
At May 01, 2006 7:49 PM, Anonymous Anonymous said...

Dear Sir

Good thoughts. I agree with your points on water problem. Vote for Se.Ve Shekar, atleast he made us laugh several times. Keep writing.

Regards
Sa.Thirumalai

 
At May 02, 2006 11:00 AM, Blogger VSK said...

வி.கா. ஒருவர் மட்டுமே இப்போதைக்கு நம்ம வேலையை நாம மட்டுமே பாத்துக்க விடுவார்னு தோணுது.
அதனாலதான், என் ஆதரவு அவருக்கு.

:-) :-(

 

Post a Comment

<< Home