Friday, May 05, 2006

தேர்தல் 2060

தேன்கூடு & தமிழோவியம் இணைந்து நடத்தும் வலைப் பதிவாளர்களுக்கான 'மாதாந்திரப் போட்டி' யில் என்னுடைய பதிவு:


தனியைத் தக்க வை



தலையனையைப் பிதுக்கிப் பிசைந்துகொண்டு இந்த விஸ்கஸ் படுக்கையில் புரளுவது அலாதி சுகம்தான். அறையின் வெப்பத்தை பதினைந்துக்குக் குறைத்தேன். நேற்று நள்ளிரவுக்கு மேல் கேபிள்விஷனைப் பார்த்த்துக்கொண்டிருந்தது இன்று கண்களை அழுத்துகிறது. ஆனால் என்ன செய்வது? இன்று 2060ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல். பெரிய இரண்டு கட்சிகளும் தடாலடியாக புதிய அதிர வைக்கும் ஊழல் புகார்களை ஒருவர் மீது ஒருவர் நேற்று அள்ளி வீசிக் கொண்டார்கள். ரொம்பவும் விறுவிறுப்பாக இருந்தது.


தேர்தலுக்கு முந்தய நாளுக்கென்றே சிறப்பாகத் தயாரித்து தனியாக வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. நேரம் போனதே தெரியவில்லை. இன்று அரசு விடுமுறை. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்கிற பெருமையை நூற்றாண்டுகளுக்கு சாதித்து, மேலும் பத்தாண்டுகள் ஓடிவிட்டன. இதோ இன்றைக்கு மற்றுமொரு ஒரு பொதுத் தேர்தல் தமிழக சட்டசபைக்கு. தேர்தல் தினத்தை விடுமுறையாக வைத்திருப்பதால் ரொம்பவும் போரடிக்கிறது. வயது முப்பத்தைந்துக்கு மேல் ஆகிறது. குடும்பமென்று ஒன்றும் ஆகவில்லை. ஆனால் தனியாக இருப்பது ஒன்றும் கஷ்டமாக இல்லை. இருந்தாலும் சொந்தமாகவோ தத்தாகவோ குழந்தைகள் இல்லாதிருப்பதுதான் பெருங்குறையாக இருக்கிறது. எனக்கு வளர்ப்பாக ஒரு ரோபோ கூட கிடையாது. பொழுதைத் தள்ளுவதுதான் சில நேரங்களில் பெருங்கஷ்டம்.


என்ன செய்வதென்றே புரிவதில்லை. காலை எட்டுமணிக்கெல்லாம் வாக்குப்பதிவு ஆரம்பித்துவிட்டிருக்கும். ஒன்பது மணி ஆனபின்னும் நான் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கிறேன். விடுமுறையும் சோம்பேறித்தனமும் சயாம் இரட்டையர்கள் போலும். பிரிப்பதற்கு ஒரு லேசரேஷன் செய்தால்தான் முடியும் போலிருக்கிறது.

பத்து கட்சி கூட்டணியும் பதிமூன்று கட்சி கூட்டணியும் மோதுகின்றன. முன்னெல்லாம் சுயேச்சைகள் என்று ஐம்பதுபேர்கூட போட்டியில் இருப்பார்களாம். சே! எவ்வளவு நாகரீகமற்றவர்களாய் இருந்திருக்கிறோம்? இப்போது அப்படியா? மூன்று பேர்தான் சுயேச்சை என்ற உச்சவரம்பும், இவர்களைத் தீர்மானிக்க பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே குட்டிக்குட்டியாய் ஆன்லயன் தேர்தல்களுமாய் ரொம்பத்தான் ஜனநாயகமாகப் போய்கொண்டிருகிறார்கள் தேர்தல் ஆணையத்தினர். எவ்வளவுதான் குறைந்த ஊழல்க் காரர்களாய் இருந்தாலும் சுயேச்சைகள் ஏன் பெரும்பாலும் வெல்லுவதில்லை?

ஓட்டு கேட்டு அலையும் ரோபோ வண்டிகளின் சர்புர்ரெல்லாம் நேற்றோடு நின்று போய்விட்டது. அப்பா! இனிமேல் தெருக்கள் அமைதியாக இருக்கும். இன்பாக்ஸில் ஓட்டுக்கேட்டு மின்னஞ்சல்கள் நிரம்பி வழியாது. குருஞ் செய்தியிலும் பாப் மெயில்களும் - அப்பப்பா போதுமடா சாமி - இந்த ஒருமாதமாய்ப் பாடாய்ப் படுத்திவிட்டன.


கேபிள்விஷனில் முடிவுகளைப்பற்றி ஹேஷ்யங்கள் வர ஆரம்பித்துவிட்டன. சற்று நேரம் திரையை என்முன் இழுத்துவைத்து பார்த்தேன். ஒன்றும் பெரிதாய் விறு விறுப்பு இல்லை. யார் வந்தால் என்ன? யார் முந்தினால் என்ன? யார் பிந்தினால் என்ன? கதவு தட்டப்பட்டது. பக்கத்து பிளாட்டிலிருந்து ஜெயன் எப்போது ஓட்டுப்போடப் போகிறேன் என்று டோர்விஷனில் கேட்டான். இன்னும் முடிவு செய்யவில்லையென்று சொல்லிவிட்டு மீண்டும் படுக்கையில் புரண்டேன்.

சில நேரங்களில் அலுவலகம் கூட சொர்க்கமாகத் தோன்றுகிறது. நாமாக யோசிக்கவே வேண்டாம். அலுவல் ஆற்றில் குதிக்க வேண்டியதுதான், அது நம்மை அதன் போக்கிற்கு இழுத்துச் சென்றுவிட்டு மாலையில் நம் அறையில் விட்டுவிடும்.

எப்படி ஓட்டுப்போடலாமென்று யோசித்தேன். இந்த ஆன்லைனில் ஓட்டுப்போடும் வசதியை எப்போது செய்யப்போகிறார்களோ தெரியவில்லை. இன்றைய தேதிக்கு ஓட்டுப்போடுவதற்கும், நமக்கே நமக்கான குழந்தையை நாமாகப் பெற்றுக் கொள்வதற்கும் மட்டுமே நாம் நேரடியாக செயல்பட வேண்டியிருக்கிறது. பின்னது சரி. ஆன்லயனில் முடியாது. ஆனால் ஏன் ஓட்டு போடமுடியாது? ஆன்லயனில் வாக்களிப்பதை ரெஃபரெண்டங்களுக்குப் பயன்படுத்தும் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு மட்டும் இன்னும் பழமையான முறையை வைத்துக் கொண்டிருக்கிறது. ஊழல் செய்து விடுவார்களாம். எல்லாவற்றிலும் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் மட்டும் மற்றவர்கள் யாரும் ஊழல் செய்துவிடக் கூடாது. ஒவ்வொருவரின் நேர்மையையும் மற்ற எல்லாரும் பார்த்துக் கொள்வார்கள்!

பதினொன்றே முக்காலுக்கு நடமாடும் வாக்குச்சாவடி என் தெருவுக்கு வருமென்று மின்னஞ்சலும் தாளஞ்சலும் அரசு அனுப்பியிருந்தது. அது வரட்டும் நாம் சாவடிக்குப் போக வேண்டாம். குடிமைச் சீட்டை (citizen card) எடுத்து தயாராக வைத்துக்கொள்வோம். சீட்டை உட்செலுத்தி பின் இடதுகை பெருவிரல் ரேகையையும் காட்டினால்தான் சாவடிக் கதவு திறக்கும். பக்கத்து பிளாட்டில் அரவம் கேட்டது. ஜெயனைக் கூப்பிட்டேன். வந்தான். ஓட்டுப் போட்டு விட்டானாம். ஏதாவது புதுமை உண்டா என்று கேட்டேன். அவன் வீட்டினர் மதுரையிலிருந்து மூன்று மாதங்களுக்கு முன் சென்னைக்கு வந்தவர்கள். எந்த தொகுதியைச் சேர்ந்தவரென்பது தானாகவே வந்துவிடுகிறது. குடிமைச்சீட்டின் படி உங்கள் தொகுதிக்கு இந்தியாவில் எங்கிருந்தபடியும் வாக்களிக்கலாம். இதை அவன் அதிசயித்து சிலாகித்தான். இதிலென்ன அதிசயம்? ஆன்லயன் வசதியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வருகிறார்கள். அவ்வளவுதான். நான் பிறப்பதற்கு முன்னெல்லாம் இரண்டு முறை ஓட்டளிப்பதைத் தடுப்பதற்கு கைவிரலிலே ஒரு அழியாத மை அடையாளம் வைப்பார்களாம். அந்த காலத்தில் கழுதைகளுக்கு அடையாளத்திற்காக சூடு போடுவதைப்போல!

"கண்ணுக்கு நடுவில மைடப்பா,
உன்னோட தாய்மொழி லப்டப்பா" என்ற சமீபத்திய விடியோ படப்பாடல் நினைவுக்கு வருகிறது! ம், கசம்!

குறித்த நேரத்திற்கு நடமாடும் சாவடி வந்தேவிட்டது. என் செய்திப்பெட்டி சினுங்கிய வண்ணமாக இருக்கிறது. நான் இன்னும் தூங்கின மேனியாக இருக்கிறேன். அரசு தான் இப்படி ஓட்டுபோட வருந்தி வருந்தி என்னை அழைக்கிறது. அப்படிபோய் இந்த ஓட்டைப் போடாவிட்டால்தான் என்ன? ஓட்டுப் போட்டவுடன் அரசாங்கம் நமது கணக்கில் ஏற்றும் 3000 ரூபாய் ஒரு பெரிய விஷயமில்லை. ஆனால் குடிமைப் பேரேட்டில் நம் தேசபக்திக் குறியெண் குறைந்துவிடும். ஒழுங்காக வரிகட்டவேண்டும். ஒழுங்காக ஓட்டுப் போட வேண்டும். தேசபக்திக் குறியெண் அப்படியே இருக்கும். இல்லையென்றால் குறைந்துபோய் நம்மை கழுத்தறுக்கும். அட அது குறைந்தால்தான் என்ன? வங்கிகளில் கடன் தருவதற்கு கொஞ்சம் மேலே கீழே பார்ப்பார்கள். தேர்தலுக்கு நிற்க மனுச்செய்யும் போது ரொம்ப குறைவாக இருக்கிறது என்று சொல்லி நிராகரிப்பார்கள். பள்ளிகளில் அனுமதி கிடைப்பதில் கொஞ்சம் பிரச்சனையிருக்கும். போகட்டுமே! இதெல்லாம் யாருக்கு வேண்டும்? எல்லா வரிகளையும் ஒழுங்காய் கடைசிநாளுக்கு முன்பாகவே கட்டியாகிவிட்டது. இதுவரைக்கும் முக்கால்வாசி தேர்தல்களில் ஒழுங்காக ஓட்டும் போட்டாகிவிட்டது. கொஞ்சம் குறைந்தால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது. ஆனால் பாருங்கள், வரி கட்டுவதற்கு கொஞ்சமாக புள்ளிகளையும் ஓட்டுப் போடுவதற்கு அதிகமான புள்ளிகளையும் வைத்திருக்கிறார்கள் புத்திசாலிகள்! தலையனையை இன்னும் கொஞ்சம் என்னுள் தினித்துக் கொண்டேன்.

இந்த நண்பர்களுக்கெல்லாம் என்ன ஆயிற்று? எங்கே போய் ஒழிந்தார்கள் எல்லாரும்? தொலைபேசிகளுக்கு என்ன ஆயிற்று? எல்லா தொலைபேசியும் செத்து கித்து போய்விட்டதா? ஹோலோ திரையில் சமீபத்திய வெளியீடு தமிழ்ப்படமொன்றைப் போட்டேன். பிரபலமான ஹீரோவும் ஹீரோயினும் முப்பரிமானத்தில் கொழுகொழுவென்று அசிங்கமாய் ஆடிப்பாடினார்கள். ஆனால் படத்தில் மனம் ஒட்டவில்லை.


நடமாடும் சாவடியும் போய்விட்டது. பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. எழுந்துபோய் ஆம்லெட் போட்டேன். நேற்று வாங்கிய சாண்விச், கொஞ்சம் பிரட், மற்றும் கொறி வகைகள் என சாப்பிட ஆரம்பித்து செய்திகளை கேபிள்விஷனில் கவனிக்க ஆரம்பித்தேன். ஆகா, சென்ற சட்ட மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களையும் வரிசையாகக் காட்டுகிறார்கள்.

காணக் கண்கோடி வேண்டும்! என்ன இருந்தாலும் இந்தியா இந்தியாதான். உலகம் சாதிக்காத ஒன்றை சாதாரணமாக சாதித்துவிட்டதே! வழக்கம் போலவே - சத்தமில்லாமல்! எப்படி இருக்கிறது வண்ணமயமாக நம் சட்டசபை? சட்ட சபையிலும் நாடாளுமன்றத்திலும் சரிசமமாக பெண்கள், நான் பிறப்ப்பதற்கு முன்பிருந்த 33% பெண் ஒதுக்கீட்டை 50 சதமாக்கி பதினேழு ஆண்டுகளுக்கு மேலாகிறது. கடந்த மூன்று தேர்தல்கள் 50% பெண்கள் இட ஒதுக்கீட்டில் நடந்து முடிந்தது. எப்பொழுதும் ஆண் பெண் தொகுதிகளின் எண்ணிக்கை சமமாக இருக்குமாறு எல்லா சட்டமன்ற, நாடாளுமன்ற, ஊராட்சிமன்ற தொகுதிகளையும் இரட்டைப்படை எண்களாக்கியது இன்னும் சிறப்பு. தமிழ்நாட்டிற்கு எப்போதும் 234 தான். ஆண்களும் பெண்களும் எப்போதும் - இனி எப்போதும் - சரி சம எண்ணிக்கையில். எந்த உலகத்தில் எந்த கிரகத்தில் இந்த விந்தை நடக்கும்? இந்தியா, இந்தியா - இந்தியாவில் மட்டும்தான் நடக்கும்! இப்போது என்னுடைய தி.நகர் தொகுதி பெண்களுக்கான தனித்தொகுதி. தியாகராயநகர்(தனி). 33% இருந்த போதிருந்த தனித் தொகுதியொன்ற பெயர் இன்னும் நீடிக்கிறது. உண்மையில் ஒரு தொகுதி ஆண் தொகுதி அல்லது பெண் தொகுதிதான். இரண்டுமிலாதவர்களைக் கூட அவர்கள் விருப்பத்தின்படி ஆண் அல்லது பெண்ணாகப் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் பாவம் அவர்கள். அவர்களுக்கென்று எல்லா தேர்தல்களிலும் தனித் தொகுதி வேண்டுமென்று ரொம்ப நாளாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சரிசமமான பெண்ணுரிமை! உண்மையிலேயே சாதனைதான். என் நெஞ்சம் கொஞ்சம் தேசபக்தியால் விம்மியது. எந்தப் பற்று இல்லாவிட்டாலும் தேசப்பற்றில் எப்படி எல்லோரும் ஒத்துப் போய்விடுகிறார்கள்? ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்களிக்கும் ஆண் பெண் எண்ணிக்கையை வைத்து ஒரு சிக்கலான கணித சூத்திரத்தின்படி ஒரு தொகுதி ஆண் தொகுதியா அல்லது பெண் தொகுதியா என்று தீர்மானிக்கிறார்கள். ஆண்களோ பெண்களோ குறைவாக வாக்களித்தால் தொகுதி கைமாறி விடும். தொகுதியில் எந்த கட்சியின் தொகுதியை எந்த கட்சி பிடித்தது என்பது ஒரு புறமிருக்கட்டும், எந்தெந்த தொகுதிகள் பால்மாறிப் போய்விட்டன (உண்மையிலேயே!) என்பது மிகப் பெரிய செய்தி! அப்பழுகில்லாத அர்த்தநாரீ ஆட்சி முறைதான்!


மணி நான்காகப் போகிறது. தேநீர் போட்டு குடித்தால் நன்றாக இருக்கும்.

அடடா தேநீரெல்லாம் வேண்டாம். இப்போது இதை என்னும்போதும் தான் எனக்கு சுரீரென உறைக்கிறது. நான் கண்டிப்பாக வாக்களித்தே ஆகவேண்டும். அப்போது தொலைபேசி அழைத்தது.

"உங்கள் சாவடியில் உங்களைத் தவிர எல்லோரும் வாக்களித்தாகிவிட்டது. நீங்கள் வருவதாக இருந்தால் காத்திருக்கிறோம். இல்லையென்றல் நாங்கள் மூடிவிடுகிறோம்".

"இல்லை. இல்லை. கண்டிப்பாக நான் வருகிறேன். மூடி விடாதீர்கள்".

"சீக்கிரம் வாருங்கள், மிஸ் காயத்ரி".

நான் வாக்களிக்காவிட்டால் தொகுதி கைமாறி ஆண்களுக்குப் போனாலும் போய்விடும். தனித்தொகுதியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவசரமாக உடைமாற்றிக் கொண்டு வெளியே ஓடி என் ஸ்கூவில் ஏறிச் சாவடிக்குப் பறந்தேன். வாக்களித்துவிட்டு சாவடியில் தரும் தேநீரைக் குடித்துக் கொள்ளலாம்.

************ 6th May 2006 அன்று எழுதியது**********

9 Comments:

At May 06, 2006 1:04 AM, Anonymous Anonymous said...

அருமையான அ.பு.க. வெற்றிபெற வாழ்த்துக்கள்.

 
At May 06, 2006 6:34 PM, Blogger ஓகை said...

நன்றி அனானி அவர்களே! பெயரைச் சொல்லியிருக்கலாமே!

 
At May 10, 2006 12:10 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

நல்ல கற்பனை நடராஜன்.. 50% இட ஒதுக்கீடு ஆண்களுக்குன்னு சொல்வீங்கன்னு நினைச்சேன்.. :)

நடமாடும் வாக்குச் சாவடி வந்தாலும் வந்து விடும் :)

 
At May 10, 2006 12:45 AM, Blogger பொன்ஸ்~~Poorna said...

நடராஜன், சாய்வெழுத்துக்கள்(italized) படிக்கக் கடினமாக உள்ளது.. சாதா எழுத்துருவில் எழுதலாமே...

 
At May 12, 2006 3:56 AM, Blogger இலவசக்கொத்தனார் said...

//"கண்ணுக்கு நடுவில மைடப்பா,
உன்னோட தாய்மொழி லப்டப்பா" //

2060-ல்லும் நம்ம பா(ட்)டு இப்படிதானா? கஷ்டம்டா சாமி.

நானும் பொன்ஸ் மாதிரி ஆண்களுக்கான தொகுதியா ஆக்கத்தான் அண்ணன் கிளம்பப் போறாருன்னு நினைச்சேன்.

 
At May 26, 2006 10:05 AM, Blogger ENNAR said...

நடராஜன்,
ஆஹா நண்பரே நன்று நன்று
54 ஆண்டுகள் முனனோக்கிய தங்கள் பார்வை நன்று. நாம் குடியரசாகி 56 ஆண்டுகளை நினைவுகூறத்தான் தாங்கள் 54 ஆண்டகள் முன்னோக்கிச் சென்றீர்களோ? எனக்கும் அகவை அதுதான் யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் என்றும் நான் இளைஞன். ஆமாம் வரும் காலத்தில் அவசரஅவசரமாக தனியார் கம்பெனிக்கு வேலைக்குச் செல்லாமல் தூங்குவார்களா? ஓ அதுதான் விடுமுறை என்றீர்களோ? அந்த நாட்களில் விடுப்பு கொடுக்காமல் அலுவலகத்திற்கே அந்த வாக்குச் சாவடி வண்டி வராதா?
கற்பனை வெகுஜோர்
பாராட்டுகள் வாழ்த்துக்கள்

 
At May 26, 2006 2:39 PM, Blogger பொன்ஸ்~~Poorna said...

பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டதற்கு என் வாழ்த்துக்கள்:)

 
At May 26, 2006 10:23 PM, Blogger ஓகை said...

அலுவலகத்திற்கே சாவடி வரும்தான். ஆனால் இவள் வேலை செய்யும் அலுவலகம் ரொம்பவும் ஜனநாயகம்.

 
At May 26, 2006 10:24 PM, Blogger ஓகை said...

பொன்ஸ், நன்றி.

 

Post a Comment

<< Home